ராஜேந்தர் வீட்டு கதவுகளை திருடிய மாவட்ட செயலாளர்
மதுரை: மதுரையில் உள்ள லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தரின் வீட்டுக் கதவுகள், ஜன்னல்களை அவருக்குத் தெரியாமல் பிரித்து எடுத்த கட்சியின் மாவட்ட செயலாளரை கையும் களவுமாக பிடித்தார் ராஜேந்தர்.
மதுரை எல்லீஸ் நகரில் லட்சிய திமுக தலைவர் விஜய.டி.ராஜேந்திருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை அவரது கட்சியின் மாவட்ட செயலாளர் பரமன் என்பவரின் பொறுப்பில் ராஜேந்தர் விட்டிருந்தார்.
இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட விரும்பிய ராஜேந்தர், மூன்று நாட்களுக்கு முன்பு பரமனிடம் இருந்து சாவியை வாங்கி வைக்குமாறு மதுரை விநியோகஸ்தர் ராஜூ என்பவரிடம் கூறியிருந்தார் ஆனால் பரமன் சாவியை கொடுக்கவில்லை.
இதையடுத்து தனது மனைவி உஷாவுடன், தேனி மாவட்டம் கண்டமனூர் வந்திருந்த ராஜேந்தர், அங்கிருந்து எல்லீஸ் நகர் வீட்டுக்குப் போனார்.
அப்போது, 3 பேர் கடப்பாரை சுத்தியலால், தேக்கினாலான ஜன்னல், கதவுகளை பெயர்த்தெடுத்துக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்தர், அவர்களை பிடித்து விசாரித்தார். பரமன்தான் எடுக்கச் சொன்னதாக 3 பேரும் கூறினர். இதுகுறித்து போலீஸூக்கு டி.ஆர். தகவல் கொடுத்தார். பரமன் மற்றும் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
வீட்டை இடிக்கும்போது இவற்றை யாருக்காவது விற்றுவிடுவார் என்றுதான் நான் எடுத்தேன் என்று பரமன் கூறினார்.
இதையடுத்து அவருக்கும், ராஜேந்தருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் தனது செயலுக்கு பரமன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து போலீஸில் புகார் செய்யாமல் பரமனை மன்னித்து விடுவதாக ராஜேந்தர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications