ஆழ்வார்குறிச்சி அருகே தீவிரவாத பயிற்சி தந்த தௌபீக்

நெல்லையில் கைதான தீவிரவாதி அப்துல் கபூர், சென்னையில் கைது செய்யப்பட்ட ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரிடம் நெல்லை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தைத் தாக்க வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சதித் திட்டங்களுக்கு இறைவன் ஒருவனே அமைப்பின் தலைவராக உள்ள தௌபீக் முக்கிய ரோலாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து தௌபீக்கை பிடிக்க உதவி கமிஷனர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம், பீமா பள்ளிவாசலுக்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தௌபீக் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. தௌபீக் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆழ்வார்குறிச்சியில் தீவிரவாத பயிற்சி:
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தௌபீக், 20 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் அந்த இளைஞர்களுக்கு தௌபீக் பயிற்சி அளித்துள்ளார். சுதந்திர தின தாக்குதலுக்காக அந்த இளைஞர்களுக்கு அவர் மூளை சலவையும் செய்துள்ளார்.
இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பது குறித்து அந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸாரும் அங்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால் போலீஸார் வருவதை அறிந்த தௌபீக் அங்கிருந்து தப்பியுள்ளார். அந்த இளைஞர்களை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.
தற்போது தௌபீக்கை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரா உதவியுடன் நெல்லை மாநகர் பகுதியில் சில முக்கிய பிரமுகர்களை தௌபீக் சந்தித்து பேசியதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications