சென்னை போக்குவரத்து நெருக்கடி அடுத்த மாதம் குறையும்: ஸ்டாலின்
சென்னை: சென்னை நகரில் கட்டப்பட்டு வரும் 3 மேம்பாலங்கள் அடுத்தடுத்து திறக்கப்படவுள்ளதால், நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி அடுத்த மாதம் வெகுவாக குறையும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.நகர் உஸ்மான் சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அப்பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில்நேற்று பாலத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திருமலை சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும்.
ஆலந்தூரில் ரூ. 6.03 கோடி செலவில் கட்டப்படும் பாலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும். ரங்கராஜபுரம் ரயில்வே சந்திப்பில் கட்டப்பட்டு வரும் ரூ. 15.74 கோடியிலான பாலம் செப்டம்பரில் முடிவடையும்.
மணியக்கார சாலை சந்திப்பில் ரூ. 10.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை மார்ச் மாதத்தில் முடிவடையும்.
இந்த பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன், நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விடும்.
உஸ்மான் சாலை மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 14ம் தேதி திறந்து வைக்கிறார். இரு வழிப் பாதையிலான இந்தப் பாலம் ரூ. 19.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டவுடன் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விடும்.
பெரம்பூரில் ரூ. 45.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் என்றார் ஸ்டாலின்.