குவியும் பாராட்டுகள்-பரிசுகள்: அபினவ் வியப்பு

ஒலிம்பிக்கில் இந்தியாவின் 108 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில், தனி நபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள அபினவ் பிந்த்ரா, தங்கம் வென்ற அடுத்த நாள் தனது பிளாக்கில் மனம் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நான் மாபெரும் சாதனையை நிகழ்த்தி விட்டதாக அனைவரும் சொல்கிறார்கள். நானும் அதை உணர்கிறேன். இருப்பினும், இந்த அளவுக்கு என்னைப் பாராட்டுவதும், நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உண்மையைச் சொல்வதாக இருந்தால், நான் மாறவில்லை. இன்னும் அதே அபினவ்தான். போட்டிக்கு முதல் நாள் ஒலிம்பிக் கிராமத்தில், எனது அறையில் தனிமையில் உலவிக் கொண்டிருந்த அதே அபினவ்தான்.
வெளிப்படையாக சொல்வதாக இருந்தால், இந்த பாராட்டுக்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. எனது சாதனைகளை சத்தம் போட்டுச் சொல்வது எனக்குப் பிடிக்காத ஒன்று. அதற்காக இது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவம், தருணம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை.
என்னைப் பொருத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் எனது வாழ்க்கையாக இருந்தது. உண்மையில், 10 மீட்டர் தொலைக்குள்தான் எனது வாழ்க்கையே இருந்தது. எனது வீட்டில் எனது வசதிக்காகவும், பயிற்சிக்காகவும் சொந்தமாக ஒரு ஷூட்டிங் ரேஞ்சையே அமைத்துக் கொண்டேன். எனக்கு கவனச் சிதறல் பிடிக்காது. எனவேதான் எனது வீட்டுக்குள்ளேயே பயிற்சி ரேஞ்சை அமைத்துக் கொண்டேன். எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பயிற்சி மேற்கொண்டேன். அது இன்றைக்கு பலன் கொடுத்துள்ளது. இல்லையா?
இன்னும் நிறைய சொல்ல விரும்புகிறேன். இந்த உணர்வுகள் எல்லாம் சற்று அடங்கட்டும். அப்போது இன்னும் நிறைய சொல்கிறேன். நான் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் என்னை மீடியாக்கள் சுற்றத் தொடங்கின. ஆனால் நான் தப்பித்து விட்டேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த புதிய அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனது நண்பர்களுடன் அருமையான டின்னருக்கு தயாராகி வருகிறேன்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைவருமே பல ஆண்டு உழைப்பை இங்கு வியர்வையாக கொட்டிக் கொண்டுள்ளனர் என்பதை இந்திய மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்கள் அனைவரையும் இந்திய மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
நமது சாதனைக்காக மகிழ்வதும், கொண்டாடுவதும் ஓ.கே. ஆனால் அதே சமயத்தில், அனைவரும் அதேபோன்ற சாதனையை படைக்க ஆதரவு காட்ட மறக்காமல் இருப்பதும் அவசியம். நாம் சாதனை படைக்க தவறும்போதும் அதே அளவிலான ஆதரவு இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் விளையாட்டுத் திறமையை மதிப்பட சரியான அளவுகோல் ஒலிம்பிக் போட்டிதான்.
எனவே நமது நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் நல்லாதரவு தர வேண்டும். எனது வெற்றிக்காக நாடு கொண்டாட்டத்தில் ஆழ்ந்ததும், மகிழ்ச்சியில் மூழ்கியதும் என்னை நெகிழ வைத்து விட்டது. இந்த வெற்றிகள் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நமது திறமைகள், நமது மக்களின் ஆதரவு ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியா உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு சக்தியாக உருவெடுக்கும் என திடமாக நம்புகிறேன். ஆனால் அதற்கு முறையான அமைப்பு வேண்டும். நல்ல பயிற்சி, ஆதரவு வேண்டும்.
என்னால் முடிந்தவரை அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க நான் முயற்சிப்பேன். அதேபோல ஒவ்வொரு இந்தியரும், நமது நாட்டு விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டும். அதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் பிந்த்ரா.
மிகப் பெரிய சாதனையைச் செய்துள்ள போதிலும் கூட தனது அடக்கம் மாறாமல் அபினவ் பேசுவதுதான், அவர் வென்ற தங்கத்தை விட மிகப் பெரிய பொக்கிஷம், இல்லையா?












Click it and Unblock the Notifications