இலவச கேஸ்-பஞ். தலைவரை கண்டித்து சாலை மறியல்
தர்மபுரி: இலவச கேஸ் ஸ்டவ், சிலிண்டெர் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி பஞ்சாயத்துத் தலைவரை கண்டித்து தர்மபுரி அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு அரசின் இலவச சமையல் கேஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இலவச கேஸ் இணைப்புக்கு 700 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல் கட்டமாக 200 பயனாளிகளுக்கு மட்டும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கேஸ் இணைப்பும் திமுக பஞ்சாயத்து தலைவர் மாதுவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக பொது மக்கள் கூறினர்.
இதை கண்டித்தும், கேஸ் இணைப்பு உடனடியாக வழங்கக் கோரியும் தர்மபுரி-ஒகேனக்கல் சாலையில் கிராம மக்கள் திடீர் மறியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவருக்கும் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications