முஷாரப் மீது இன்று கண்டன தீர்மானம்-வெல்லுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று கண்டன தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
சர்தாரி தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஆட்சிக்கு ஆதரவு தந்து வரும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன.
இதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை துவங்குகிறது.
அதே போல நாட்டின் 4 மாகாணங்களிலும் உள்ள சட்டசபைகளிலும் முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே இந்தத் தீர்மானம் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இங்கு முதல்வராக இருப்பது நவாஸ் ஷெரீபின் தம்பி சாபாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் முஷாரபுக்கு எதிராக 321 வாக்குகளும் ஆதரவாக வெறும் 25 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. இதே நிலை தான் பிற 3 மாகாணங்களிலும் ஏற்படும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானம் தொடர்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின்னர் சட்ட அமைச்சர் பரூக் கூறுகையில், முஷாரப் மீது ஆதாரப்பூர்வமான குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர் தப்ப முடியாது. எனவே, அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது என்றார்.
ஆனால், இந்த கண்டன தீர்மானத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக முஷாரப் மீண்டும் அறிவித்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதியாக இருந்தபோது நாட்டின் பிரதமராக இருந்த ஷெரீபுக்கே தெரியாமல் கார்கிலில் போரைத் தொடுத்தவர்.
பாகிஸ்தானின் 61 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக கண்டனத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் முதல் அதிபர் பர்வேஸ் தான்.
இந்த கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் தேசிய சபை மற்றும் செனட் சபை அடங்கிய கூட்டு கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி ஆதரவு தேவை. தேசிய சபையில் 342 உறுப்பினர்களும், செனட் சபையில் 100 உறுப்பினர்களும், மொத்தம் 442 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், கண்டனத் தீர்மானம் வெற்றி பெற 295 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், முஷாரப் எதிர்ப்பு கட்சிகளுக்கு தேசிய சபையில் 235 உறுப்பினர்களும், செனட் சபையில் 39 உறுப்பினர்களுமாக மொத்தம் 274 உறுப்பினர்களின் ஆதரவுதான் உள்ளது.
ஆனாலும் போதுமான மெஜாரிட்டி பலம் உள்ளதாக சர்தாரி கூறியுள்ளார். போதுமான ஆதரவை திரட்டிய பிறகுதான் கண்டனத் தீர்மான நடவடிக்கையை தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
முஷரப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) பிரிவை சேர்ந்த பல எம்.பிக்களும், முஷரப்புக்கு எதிராக வாக்களிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தத் தீர்மானத்தின் மீது சில நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடக்கும்.












Click it and Unblock the Notifications