சென்னை-ரூ.100 கோடியில் அதிநவீன நூலகம்-முதல்வர் அடிக்கல்
சென்னை: சர்வதேச தரத்துடன் ரூ.100 கோடி மதிப்பில் அதிநவீன நூலகம் சென்னையில் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி நடக்கிறது. முதல்வர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கன்னிமாரா நூலகம் தற்போது மைய நூலகமாக செயல்பட்டு வருகிறது. ரூ.100 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் புதிய நூலகம் கட்டப்படுகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது.
இது ஆசியாவிலேயே 2வது பெரிய நூலகமாகும். புதிய நூலக அடிக்கல் நாட்டு விழா வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
தகவல் தொழில் நுட்ப பூங்காவை போல இந்த நூலகம் 8 அடுக்கு மாடி கட்டடமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2,500 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான ஆடிட்டோரியம், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என தனித் தனியாக அமர்ந்து படிக்கும் வசதியுடன் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.
அனைத்து தளங்களிலும் இன்நெட் வசதி வழங்கப்படுகிறது. 10 லட்சம் புத்தகங்கள் வைக்க கூடிய அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். இந்த ஆண்டில் தொடங்கும் இதன் கட்டுமான பணி அடுத்த 18 மாதத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications