ஓமனில் கட்டட வேலை-தமிழகத்தில் நேர்முகத் தேர்வு!
சென்னை: ஓமன் நாட்டில் கட்டடத் தொழிலாளர் வேலைவாய்ப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.
இதுகுறித்து சென்னை சேத்துப்பட்டில் இயங்கும் தமிழக அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓமன் நிறுவனத்துக்கு டைல்ஸ், மார்பிள், செங்கல் வேலை, பிளாஸ்டரிங் போன்ற ஏதேனும் ஒன்றில் 8 ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்ற கொத்தனார்கள், 10 ஆண்டு அனுபவமுள்ள சென்ட்ரிங் கார்பென்டர்கள், பார் பெண்டர்கள் (கம்பி வளைப்பவர்கள்) தேவைப்படுகின்றனர்.
ஐடிஐ தேர்ச்சி பெற்ற 5 ஆண்டு அனுபவமுள்ள எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்களும் தேவைப்படுகின்றனர். மேலும், 8 ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்ற சிவில் பி.இ பட்டம் பெற்ற புராஜக்ட் இன்ஜினியர்கள், எச்விஏசி பிரிவில் அனுபவம் பெற்ற புராஜக்ட் இன்ஜினியர்கள், டியூசிடி பேப்ரிகேட்டர்களும் தேவைப்படுகின்றனர்.
இந்தப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக வரும் 21ம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்திலும், 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பட்டணம், தாஜ் திருமண மகாலிலும்,
24ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனால்டு சாலையில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலிலும் (ஜென்னி ஹோட்டல்) 25ம் தேதி சென்னை அம்பத்தூர் பாடியில் உள்ள எம்டிஎச் சாலையில் உள்ள வெங்கடசேஷ மகாலிலும் நடைபெற இருக்கிறது.
தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பம், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் 2 நகல்களுடன் 5 பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைத்து தங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் நேர்முகத் தேர்வு மையத்துக்கு செல்லலாம்.
மேலும் விவரங்கள் அறிய 044 -24464268/69 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications