இலவச கலர் டிவி: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் இலவசங்கள் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, வெற்றி பெற்றால் இலவசமாக கலர் டிவி தருவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தேர்தலில் அறிவிப்புகளில் இலவசங்கள் சகஜம்தான் என்றாலும், இலவச கலர் டிவி திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில், இலவச கலர் டிவிக்காக அரசு நிதியில் இருந்து ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பணத்தில் அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி சுப்ரமணிய பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஜே.எம்.பாஞ்சல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசியல் கட்சிகளின் இதுபோன்ற தேவையற்ற வாக்குறுதிகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மேலும் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களின் பணத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மாணவர்களுக்கு பஸ் கட்டணம் குறைப்பு, இலவச புத்தகம் போன்ற சலுகைகள் வரவேற்கக் கூடியது.
ஆனால் கலர் டிவி வழங்குவது எந்த வகையிலும் நியாமானதாக தெரியவில்லை. திமுகவுக்கு போட்டியாக இறங்கிய மற்றொரு கட்சி 12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதை கேட்ட நீதிபதி சதாசிவம், டிவி என்பது தேவையற்ற ஒன்று என்று கூற முடியாது. கிராமப்புற மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனமாக டிவி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றார். அதை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ஆமோதித்தார்.
இருப்பினும் இதுபோன்ற தேர்தல் இலவசங்கள் 282வது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது ஆராயப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து இலவச கலர் டிவி வழங்குவது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications