நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி
நெல்லை: நெல்லை அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவம்மாள் (எ) வசந்தா. இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதல் குழந்தை இறந்தே பிறந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பத்மநாதன் (எ) பவுல் செல்வம் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு 2வது தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை ஆலங்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.
தடுப்பூசி போட்ட பிறகு குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பயந்துபோன பெற்றோர் குழந்தையை உடனடியாக மீண்டும் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர் உடனடியாக நெல்லை மருத்துக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். குழந்தையுடன் நெல்லைக்கு புறப்பட்டனர். ஆனால் குழந்தை வழியிலேயே பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications