ஐ.டி. சவாலை சந்திக்க தபால்துறையின் 'அம்பு'!
டெல்லி: தகவல் தொழில்நுட்ப விஸ்வரூபத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளித்து, கிராமப்புற தபால் நிலையங்கள் சிறப்பாக செயல்படும் வகையில், தபால்துறை சார்பில் அம்பு திட்டம் (Arrow project) என்ற வித்தியாசமான திட்டம் தொடங்கபப்ட்டுள்ளது.
இமெயில், எஸ்.எம்.எஸ். ஆகியவை வந்து விட்டதால் தபால் எழுதும் பழக்கம் பெருமளவில் குறைந்து போய் விட்டது. மேலும், தந்தி அனுப்புவதும் இப்போது அறவே நின்று போய் விட்டது.
இதனால் நாடு முழுவதும் தபால் துறை தடுமாறி வருகிறது. முன்பெல்லாம் தபால் நிலையங்களில் அலை மோதிய கூட்டம் இப்போது வெகுவாக குறைந்து போய் விட்டது.
இதையடுத்து தபால்துறையை நிலை நிறுத்தும் வகையிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தபால் நிலையங்களை மேம்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், அம்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை தபால் துறை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அளவிலான கிராமப்புற தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் தபால் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மெருகூட்டப்படும். அங்கு வெறும் தபால் தலைகள், கார்டுகள், லெட்டர்கள் விற்பனை மட்டுமல்லாமல் வங்கிப் பணிகள், பண பரிமாற்றம், ஓய்வூதிய விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அறிமுகப்படுத்தப்படும்.
வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதைப் போல இங்கும் சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கலாம். தனியார் வங்கிகளும், இந்த தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படும்.
இந்த சேவைக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் தேசிய அளவில் சிறந்த தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்குப் பரிசும் வழங்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்...
தமிழகத்தில் இந்தத் திட்டம் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், துரைமங்கலம், பாடலூர், செட்டிகுளம், மதணகோபாலபுரம் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆண்டு இறுதிக்குள் 500 தபால் நிலையங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.












Click it and Unblock the Notifications