மெக்கா போகிறார் முஷாரப் - முக்கிய முடிவெடுக்கிறார்

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து நேற்று முஷாரப் விலகினார். அதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றி தனது முடிவைத் தெரிவித்தார்.
அவர் சவூதி அரேபியாவில் செட்டிலாகலாம் அல்லது அமெரிக்காவுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் மெக்காவுக்கு அவர் புனிதப் பயணம் செல்லவுள்ளார். இதற்காக விரைவில் அவர் சவூதி செல்கிறார். அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு வெளியே எங்கு வசிப்பது என்ற முக்கிய முடிவையும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவர் முடிவெடுக்கவுள்ளார்.
இருப்பினும் முஷாரப் உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டார் என்றும் சில காலத்திற்கு அவர் பாகிஸ்தானிலேயே இருப்பார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
வழக்குகளிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு ஓடி விட்டார் முஷாரப் என்ற பேச்சு எழுவதை முஷாரப் விரும்பவில்லையாம். இதனால் சில காலத்திற்கு அவர் பாகிஸ்தானிலேயே தங்கியிருப்பார் என்று அவரது வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று தனது ராஜினாமாவை அறிவித்த பின்னர் அதிபர் மாளிகையிலிருந்து கனத்த இதயத்துடன் வெளியாறினார் முஷாரப். ராவல்பிண்டியில் அதிபரின் முகாம் அலுவலகத்திற்கு அவர் போயுள்ளார். அங்கு சில நாட்களுக்கு அவர் தங்கியிருப்பார்.
மெக்கா செல்லவுள்ள முஷாரப், அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். அங்கு தங்கியுள்ள தனது குடும்பத்தினர் சிலரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
முஷாரப்பின் தம்பி நவேத் சிகாகோவில் வசிக்கிறார். அவரது மகன் பிலாலும் பாஸ்டன் நகரில் வசிக்கிறார். அவர்களை முஷாரப் சந்திக்கிறார்.
இதற்கிடையே, அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் முஷாரப்பை எதுவும் செய்ய மாட்டோம் என பாகிஸ்தான் ஆளும் கூட்டணி உறுதியளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சவூதி அரேபியா, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கியானி ஆகியோர் கியாரண்டர்களாக செயல்பட்டனர் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் நிரந்தரமாக பாகிஸ்தானிலேயே தங்க முஷாரப் விரும்பினாராம். ஆனால் அவரது நெருங்கிய ஆலோசகர்கள், பாகிஸ்தான் பாதுகாப்பானதல்ல என்று அறிவுறுத்தியதால் மெக்கா பயணத்திற்குப் பின்னர் தனக்கு பாதுகாப்பான நாட்டை தேர்வு செய்து அங்கு முஷாரப் செல்லக் கூடும் எனத் தெரிகிறது.
லண்டனில் அடைக்கலம்?:
இதற்கிடையே அவர் லண்டனில் அடைக்கலம் கோரலாம் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செளதிக்கு செல்லும் முஷாரப் நாடு திரும்பால் அப்படியே அங்கேயே தங்கிவிடலாம். பின்னர் அவர் லண்டனில் குடியேறலாம் என அந்த டெலிகிராப் பத்திரிக்கை தெரிவி்க்கிறது.












Click it and Unblock the Notifications