பாமரத்தனமாக பேசுகிறார் ஆற்காடு வீராசாமி: தா.பாண்டியன்
சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமி பாமரத்தனமாக பேசியுள்ளார். இது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு வீராசாமி பேச்சு குறித்து தா.பாண்டியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து ெதரிவிக்கையில், அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சை பார்க்கும்போது அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.
நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாளை முதல் 25ம் தேதி வரை மாநிலத் தலைமைக்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளோம். இதில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு குறித்தும் விவாதித்து முடிவு செய்ய உள்ளோம்.
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு என்பது அணுசக்தி ஒப்பந்தம் வேண்டுமா? வேண்டாமா? என்பதன் அடிப்படையில் அல்ல. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தான் நடந்தது.
இது கூடவா தெரியாது?
ஆனால், இத்தனை ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் இதுகூட தெரியாமல் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி, நாங்கள் பாஜகவுடன் சேர்ந்து வாக்களித்ததாக பேசியிருக்கிறார்.
பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அல்லாத கட்சிகளுடன் தான் கூட்டணி என்று கூறியிருக்கிறார். இதனை பார்க்கும்போது திமுகவும் கூட பாஜகவின் அழைப்புக்குரிய கட்சிதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் தெரியாத பாமரத்தனம்:
பிஜேபியும், இடதுசாரிகளும் கொள்கை ரீதியாக முரண்பட்ட கட்சி களாகும். ஆனால் 1996ம் ஆண்டு மத்தியில் நடைபெற்ற பிஜேபி ஆட்சி யில் 5 ஆண்டுகள் இடம் பெற்ற கட்சி தான் திமுக. ஆனால் நாங்கள் பிஜேபியுடன் இணைந்து செயல்படுவதாக அந்த கட்சியின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுவது அரசியல் தெரியாத பாமரத்தனமானது.
பாபர் மசூதி இடிப்பு முதல் அமர்நாத் யாத்திரை வரை தேவையான போது மதவாதத்துக்கு சார்பாகவும், வளைந்து கொடுப்பதுமான காங்கிரஸ் கட்சியின் பூசாரித்தனம் இடதுசாரி கட்சிகளுக்கு தெரியாது.
ஆற்காடுக்கு எதுவும் தெரியாது:
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் யாருடனும் பொது விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். ஆனால் இது பற்றி ஆற்காடு வீராசாமியுடன் மட்டும் விவாதம் நடத்த தயாராக இல்லை. ஏனென்றால் அவருக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.
தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியது, எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்குத்தான் நேற்றைய அவரது பேச்சிலும் உண்மை உள்ளது. டீசல் தட்டுப்பாடு கடந்த ஒரு வார காலமாக தலைவிரித்து ஆடுகிறது. இதில் கவனம் செலுத்தாத அமைச்சர்கள் வேறு பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்கள்.
சீனாவின் தூண்டுதலால் தான் அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் எதிர்ப்பதாக பேசுகிறார்கள். அவர்களுடைய கொள்கைகள் வேறு; எங்களுடைய கொள்கைகள் வேறு. இதனை புரியாமல் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. நாங்கள் எப்போதும் நட்புக்காக அரசியலை வளைக்க மாட்டோம். அரசியலுக்காக நட்பை கெடுத்துக் கொள்ளவும் மாட்டோம்.
நாங்கள் உயிரோடுதான் இருப்போம்:
காங்கிரசோடு தங்களுக்குள்ள நெருக்கத்தை காட்டிக்கொள்வதற்காக திமுக இப்போது இடதுசாரிகளை குறை கூறி வருவதாக தெரிகிறது. நாங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவோம் என்று பேசுவது தேர்தல் முடிவுகள் வந்தால் தெளிவாகி விடும். அந்த முடிவுக்கு பிறகும் இந்தியாவில் நாங்கள் உயிரோடுதான் இருப்போம். இடம் தெரியாமல் போய்விட மாட்டோம்.
எங்கள் அடிப்படை கொள்கைகள் மீதும், தேச பக்தி மீதும் சந்தேகப் பார்வையோடு பேசினால் அதனை சந்திக்கவும் அதற்கு பதில் தரவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications