முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை: தமிழக அரசு
சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு தரத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தேசிய ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொருளாதாரரீதியில், பின்தங்கிய நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது.
இக்கூட்டத்தில் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஆணையத் தலைவர் சின்ஹா மற்றும் உறுப்பினர் நரேந்திர குமார், செயலாளர் மகேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வேண்டாம் என்று பலரும் தெரிவித்தனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு ராஜஸ்தான் மாநிலத்தில் 14 சதவீதம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரை காலாவதியாகி விட்டதால் புதிதாக இந்த தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 2006ம் ஆண்டு ஜூலை முதல் ஜூலை 2009ம் ஆண்டு வரை செயல்படும். இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் தேசிய ஆணையம் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
தமிழகம் மட்டும் எதிர்ப்பு:
தனி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு முதன்மைச் செயலர்களை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறோம். எனவே, தமிழகத்தில் பொருளாதார ரீதியாக தனி ஒதுக்கீடு தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications