ரூ.18 கோடி மோசடி: தொழிலதிபரை கைது செய்ய உத்தரவு
சென்னை: ரூ.18 கோடி மோசடி செய்த தொழிலதிபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிரயோகித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உதவி ஆணையர் ஒருவருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தொழிலதிபர் ஜுன்ஜுன்வாலா ரூ. 18 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இவரது மோசடி செயலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
கடந்த மார்ச் 17ம் தேதி மும்பையில் ஜூன்ஜூன்வாலா கைது செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 26ம் தேதி சைதாப்பேட்டை 11வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அன்றைய தினம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன்ஜூன்வாலா 2 மனுக்களைத் தாக்கல்செய்தார். இதுவரையில் அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மூர்த்தி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் விசாணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை 11வது பெருநகர மாஜிஸ்திரேட் பிறப்பித்த ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவை நிறைவேற்ற சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக உதவி ஆணையர் ஒருவரை நியமித்து கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் நடவடிக்கையை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்ைகயை மேற்கொள்ள வேண்டியதாகியுள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications