தமிழக அரசு ஊழியர் ஊதிய உயர்வு-உயர் மட்டக் குழு அமைப்பு
சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 6வது ஊதிய கமிஷனின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் மற்றும் பிற படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைக்க ஒரு உயர் மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான இந்தக் குழுவில் நிதித்துறை, பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர, நிதித்துறையின் இணைச் செயலாளரும் இந்தக் குழுவுக்கு உதவ உள்ளார்.
ஊதிய உயர்வு, படிகள் தவிர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் போன்றவற்றை மாற்றியமைப்பது தொடர்பாகவும் இக்குழு ஆராய்ந்து, பரிந்துரைகளைச் செய்யும்.
மூன்று மாதத்துக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். எனவே, அனைத்துத் துறை செயலாளர்களும் துறைத் தலைவர்களும் இந்தக் குழுவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் விரைவாக வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் பின்னர் 6வது சம்பள கமிஷனை எந்த அளவில் அமல்படுத்துவது என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
அதற்கு முன் முக்கிய தொழிலாளர் சங்கங்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்று தெரிகிறது.
பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவிக்கலாம் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications