பி.இ கவுன்சிலிங்-25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தவறிய மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வருகிற 25ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. முன்னதாக 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு தற்போது தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்பில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. பிளஸ் டூ உடனடி தேர்வெழுதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கான இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் கடந்த 14ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் டூ துணை தேர்வெழுதி, அதன் மூலம் இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள், இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்து, விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உதரியராஜ் கூறியதாவது: பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு இதுவரை 867 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை 2008ம் ஆண்டுக்கான துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி வருகிற 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும். பிளஸ் டூ துணை தேர்வெழுதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுடன், ஏற்கனவே தகுதி பெற்றிருந்த விண்ணப்பிக்கத் தவறியவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.
கவுன்சிலிங்கில், கடந்த நான்கு நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். நேற்றைய கவுன்சிலிங்கில் ஆயிரத்து 364 பேர் உட்பட, இதுவரை 68 ஆயிரத்து 80 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கவுன்சிலிங் முடிவில், 13,841 இடங்கள் காலியாக இருந்தன. இன்னும் ஐந்து நாட்கள் நடக்கவுள்ள கவுன்சிலிங்கில், 8,000 இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், காலியாக இருக்கும் இடங்களுக்கு இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் நடைபெறும்.
எனவே, இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் எதிர்பார்க்கப்பட்டதை விட, மிகக்குறைவான இடங்களே காலியாக இருக்கும் என தெரிகிறது.
எம்பிஏ கவுன்சிலிங்...
தமிழகம் முழுவதும் பல்வேறு சுயநிதி கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் 7,779 எம்.பி.ஏ., இடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்ப, கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு கட்டமாக பொது கவுன்சிலிங் நடத்தப்பட்டன. முடிவில் 6,844 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 935 இடங்கள் காலியாகவுள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கவுன்சிலிங், ஜிசிடி கல்லூரியில் வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (டான்செட்) மைனஸ் மதிப்பெண் பெற்ற 235க்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வெழுத விண்ணப்பித்த அனைவருக்கும் எம்.பி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் முடிந்து மீதியுள்ள சீட்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தின் வசம் சென்றடையும். பின் இந்த இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.












Click it and Unblock the Notifications