பெங்களூர் சிறுமி தூத்துக்குடிக்கு கடத்தல் - 2 பேர் கைது
தூத்துக்குடி: பெங்களூரைச் சேர்ந்த சிறுமி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு கடத்தி வரப்பட்டார். அவரைக் கடத்திய இருவரை மும்பைக்கு சென்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் ஆஸ்டின் நகரில் காய்கனி கடை நடத்தி வருபவர் சேது என்ற சேட்டு. இவரது ஐந்து வயது மகள் ஐஸ்வர்யா. இவளை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் பெங்களுரிலிருந்து கடத்தி வந்து ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியில் விட்டுவிட்டு தலைமறைவாகினர்.
அங்கு அழுது கொண்டிருந்த அந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது தனது பெயர் ஐஸ்வர்யா என்றும் 2 பேர் தன்னை கூட்டி வந்ததாகவும் அந்த சிறுமி தமிழிலும், கன்னடத்திலும் கூறினாள். மேலும் தன்னை அழைத்து வந்த இருவர் பெயரையும் தெரிவித்தாள்.
இதை தொடர்ந்து ஆழ்வார் திருநகரி போலீசார் குழந்தையை மீட்டு தூத்துக்குடி முத்துகுவியல் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சில நாட்கள் கழித்து பெங்களூரில் உள்ள சேதுவின் செல்போனுக்கு பேசியவர்கள் உன் மகளை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம், அவளை ஓப்படைக்க வேண்டும் என்றால் 5 லட்சம் தர வேண்டும் என்றனர்.
அதற்கு அவர் பணம் தருவதற்கு முன் என் மகளிடம் பேச வேண்டும், அவளிடம் போனை கொடுங்கள் என்றதும் அவர்கள் போனை கட் செய்து விட்டனர். செல்லில் பதிவான நம்பரை வைத்து சேது பெங்களூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அந்த எண் மும்பையில் இருந்து பேசப்பட்டது தெரிய வந்தது.
போனில் பேசியவர்கள் சேதுவின் கடை அருகில் காய்கனி கடை வைத்திருக்கும் மணி, அரசன் என்றும் அவர்கள் தான் ஐஸ்வர்யாவை கடத்தினார்கள் என்றும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து பெங்களூர் போலீசார் மும்பை சென்று 2 பேரையும் கைது செய்து நேற்று தூத்துக்குடி அழைத்து வந்தனர். அவர்களுடன் ஐஸ்வர்யாவின் தந்தை சேதுவும், தாத்தாவும் வந்தனர்.
முத்துகுவியல் காப்பகத்தில் இருந்த சிறுமியிடம் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள்தான் தன்னை அழைத்து வந்ததாக சிறுமி அடையாளம் காட்டினார்.












Click it and Unblock the Notifications