வறுமையை ஒழிக்காத திமுக, அதிமுக ஆட்சிகள்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி திமுக மற்றும் அதிமுக அரசுகள் கவர்ச்சித் திட்டங்களை போட்டதே தவிர வளர்ச்சித் திட்டங்களில் அவை அக்கறை காட்டவே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நெருப்பினுள் கூட படுத்து தூங்க முடியும்; ஆனால் வயிற்றுப் பசி என்னும் வறுமை நெருப்போடு கண்களை மூடுவது கூட அரிது என்கிறார் திருவள்ளுவர். வெளியில் உள்ள நெருப்பை விட வயிற்றின் உள்ளே உள்ள நெருப்பு அவ்வளவு கொடுமையானதாகும்.

வறுமை ஒழிப்பு தினம்:

இதனை உணர்ந்துதான் தேமுதிக சார்பில் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கும்படி கேட்டு கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சிற்றூர்களில் கூட தொண்டர்கள் மற்றும் கழக அணியினர் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக மக்கள் பாராட்டும் வகையில் கொண்டாடினர்.

வறுமை ஒழிப்புக்கு நாம் நம்முடைய சொந்த பணத்தில் செய்யும் உதவிகள் நிவாரணமாக அமையுமே தவிர நிரந்தரமாக வறுமையை போக்க இயலாது. ஏழை, எளிய மக்களின் தனி நபர் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவதன் மூலமே வறுமையை போக்க முடியும்.

கேப்டன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்:

வேலை வாய்ப்பை தரும் தகுதிகளை வளர்த்துக் கொள்ள தொழிற்பயிற்சி தேவை. அத்தகைய தொழிற் பயிற்சியை தரும் வகையில் இந்த ஆண்டு ரூ.1.50 கோடியில் எனது சொந்த செலவில் 600 கம்ப்யூட்டர்களை கொண்டு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 60 இடங்களில் கேப்டன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை தொடங்கியுள்ளேன்.

மாவட்ட செயலாளர்கள், உடனடியாக 10 கம்ப்யூட்டர்களை வைத்து மாவட்டந்தோறும் இந்த கம்ப்யூட்டர் மையத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் 2002ம் ஆண்டு பத்தாவது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டது. அதன்படி 2007ம் ஆண்டில் ஏழைகளின் எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைப்பது என்றும் 2012ம் ஆண்டில் அறவே ஒழிப்பது என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டில் எண்ணிக்கை 22 சதவீதமாகவே உள்ளது.

தற்போதைய திமுக ஆட்சியில் 2007ம் ஆண்டில் பதினோறாவது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டுள்ளது. இதன்படி 2012ம் ஆண்டு ஏழைகளின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைக்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்ற ஜெயலலிதாவின் திட்டமும் பொய்யானது; 2012ல் 17 சதவீதமாக குறைக்கப்படும் என்ற கருணாநிதியின் திட்டமும் கடந்த காலங்களை போல வெறும் பகல் கனவாகவே முடியும். இந்த இரு கட்சிகளும் கவர்ச்சித் திட்டங்களை போட்டார்களே தவிர வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை பிடித்துள்ள வறுமையை போக்குவது நம் போன்றோரின் தலையாய கடமையாகும். ஆகவே கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டு பிறந்தநாளைக்கு அவரவர் சக்திக்கும், வாய்ப்புக்கும் ஏற்றவாறு வறுமை ஒழிப்பு பணியை ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தாய்மார்களுக்கு கிரிமினல்களிடம் இருந்து பாதுகாப்பு, முதியோர்களுக்கு மரியாதையான வாழ்க்கை, சமுதாயத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லாத அமைதி, எல்லோருக்கும் மருத்துவ வசதி, தூய்மையான சுற்றுப்புறம் ஆகியவையே இன்றையத் தேவை. அத்தகையதோர் புதிய சமுதாயம் தமிழ்நாட்டில் அமைய பாடுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+