'நக்ஸல்கள்'-துப்பாக்கி கோரும் வனத்துறை ஊழியர்கள்
மதுரை: தமிழக காட்டிற்குள் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டாதால் ரோந்துப் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு துப்பாக்கி மற்றும் ஜீப் வழங்க வேண்டும் என்று மாநில வன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின் வருமாறு:
வனத்துறை ஊழியர்களுக்கு காவல் துறையினருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவல் துறையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மொத்த நிலப்பரப்பில் 17.5 சதவீதம் உள்ள வனப்பகுதியை காக்க வெறும் 6,000 ஊழியர்களே உள்ளனர். இதனால் வனக்குற்றங்களை தடுக்க முடியாத நிலை உள்ளது.
அடர்த்தியான கொடைக்கானல், ஊட்டி, தர்மபுரி, கன்னியாகுமரி, மற்றும் தேனி போன்ற மாவட்ட வனப் பகுதியில் தற்போது நக்சல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது வன சரகர்களான ரேஞ்சருக்கு மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளது.
காட்டிற்குள் ரோந்து பணியல் ஈடுபடும் மற்ற வனத்துறை ஊழியர்களான வனவர்கள், வன காப்பாளர்கள், வனக் காவலர்கள் ஆகியோருக்கும் அரசு உடனே துப்பாக்கி வழங்க வேண்டும்.
ரேஞ்சருக்கு ஜீப் கொடுத்துள்ளதைப் போன்று மற்ற அதிகாரிகளுக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும். காவல் துறை பணியில் எஸ்.ஐ. பணியிடங்களை நேரடியாக நியமிப்பது போல வனத்துறையிலும் வனவர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க வேண்டும்.
வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்களுக்கு தோட்ட காவலர்கள் உள்பட அனைத்து நிலை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மதுரை, தேனி, கொடைக்கானல், இராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய வனத்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications