மீண்டும் திமுக கூட்டணி: தேர்தல் நேரத்தில் முடிவு-ராமதாஸ்

பாமகவை, கூட்டணியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு திமுக அதிரடியாக வெளியேற்றியது. இருப்பினும் பாமக கலங்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், அதிமுக பக்கம் பாமக போகலாம் என்ற பேச்சு எழத் தொடங்கியது. மேலும், இடதுசாரிகள் அமைக்கப் போகும் 3வது அணியில் பாமகவும், தேமுதிகவும் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு நேற்று பலமாக எழுந்தது.
இந்தச் சூழ்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றால் லோக்சபா தேர்தலில் கூட்டணி வலுவடையும் என்று தெரிவித்திருந்தார். மீண்டும் கூட்டணிக்கு வர பாமகவுக்கு கருணாநிதி விடுத்த அழைப்பாகவே இது கருதப்பட்டது.
நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பாமக கூட்டணிக்கு மீண்டும் வரும் என்று தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசப் போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் அழைப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக இடம் பெற்றிருந்த அணிக்கே வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் பாமக எந்த அணியில் இடம் பெற்றிருக்கிறதோ அந்த அணிக்கே தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை இது உறுதிப்படுத்தியது.
லோக்சபாவுக்கு தேர்தல் வரும் வரை பாமக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். ஆளுங்கட்சி செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டுவோம். குறைகளை விமர்சிப்போம். தக்க அறிவுரைகளை வழங்குவோம்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் வரை கூட்டணி குறித்து முடிவெடுக்க இயலாது. தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுகவின் அழைப்பு தொடர்பாக அவசரம் காட்ட ராமதாஸ் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதேசமயம், முதல்வரின் அழைப்பை அவர் நிராகரிக்கவும் இல்லை என்பதால் திமுக கூட்டணியில் மீண்டும் பாமக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications