ஜனாதிபதி பதவி-சர்தாரிக்கு ஆதரவளிக்க நவாஸ் நிபந்தனை
லாகூர்: ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சர்தாரிக்கு ஆதரவளிக்க தயார் என்று கூறியுள்ளார் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த முஷாரப் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த பதவிக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் ஆளும் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் சர்தாரி போட்டியிடுகிறார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பாக ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் கூட்டணியில் இருந்து விலகி கொள்ளப்போவதாக முஸ்லீம் லீக் கட்சி மிரட்டியுள்ளது.
இந்நிலையில், சர்தாரிக்கு ஆதரவு தருவதாகவும், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. அதில், ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் நிபந்தனை விதித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்கவும் ஜனாதிபதிக்கு தற்போது உள்ள அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நிபந்தனை. அதோடு பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைக்கு இன்று சாதகமான பதிலை தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் தான் ஆதரவு தருவோம் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications