ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: 8 பேர் கைது
ஜெய்ப்பூர்: கடந்த மே மாதம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஒருவரையும் சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 13ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 7 பேரை கோடா என்ற பகுதியில் கடந்த வாரம் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள், இம்ரான் (எ) ரஸா, நாஜாகட், மெஹந்தி ஹஸன், அமானுல்லா (எ) அமான், டாக்டர் யூனூஸ், தவ்பீக் மற்றும் டாக்டர் இஷாக் ஆகியோர்.
விசாரணையில் இவர்கள் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் 7ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவர்கள் மீது, தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது, மக்களை தூண்டிவிட்டது, சமூகத்துக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஷானாஸ் ஹூசைன் என்பவரை ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச போலீஸார் லக்னோவில் நேற்று கைது செய்தனர்.
குண்டுகளை வைத்தது, தாக்குதலுக்கு தயார் செய்தது போன்றவற்றை ஷானாஸ் ஹூசைன்தான் செய்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூர் வெடிகுண்டு தாக்குதலில் மாஸ்டர்மைண்டாக ஸாஜித் மன்சூரி என்பவர் செயல்பட்டதாக விசாரணையில் ஷானாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications