காஷ்மீர் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி, தொடரும் ஊரடங்கு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். நர்பால் என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் சௌகத் அகமது என்ற வாலிபர் குண்டடிபட்டு இறந்தார். பலர் காயமடைந்தனர்.
புல்வாமா நகரில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தாக்குதல் நடந்தது. போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் பசீத் பஷீர் என்ற வாலிபர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
குப்வாரா மாவட்டத்தில் சோட்டிபோரா என்ற கிராமத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெமிதா (18) என்ற பெண் குண்டு துளைத்து இறந்தார். ஹஜன் என்ற இடத்தில் சாகிஸ் அகமது பஹ்லு என்ற வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீஸ் தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்வங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னெச்சரிக்கை-தலைவர்கள் கைது:
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதாக கண்டித்து திங்கள்கிழமை (நேற்று) போராட்டம் நடத்தப்போவதாக பிரிவினைவாதிகள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு காஷ்மீரில் மேலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்று கருதிய போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களை கைது செய்தனர்.
தொடரும் ஊரடங்கு...:
கடந்த 2 தினங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. நேற்றும் கலவரம் வெடித்ததால் இன்றும் ஊரடங்கு தொடர்கிறது. முக்கிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு மற்றும் கலவரத்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அம்மாநிலத்தில் பத்திரிகைகளும் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களும் மற்ற பணியாளர்களும் அலுவலகம் வர முடியவில்லை. இதனால் பத்திரிகை பதிப்பு செய்ய முடியவில்லை என்று அம்மாநில முன்னணி தினசரிகளான கிரேட்டர் காஷ்மீர், எட்லாட், அப்தாப், அல்சபா, ரோஷ்ணி ஸ்ரீநகர் டைம்ஸ் ஆகியவை தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications