பழனியில் கூடுதல் பார்கிங் கட்டணம்-கோர்ட் தடை
மதுரை: பழனியில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பழனி மனித உரிமைகள் கழக அமைப்பாளர் செந்தில்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது.
பழனி அருள்மிகு தண்டாயுபாணி கோவில் புகழ்பெற்ற தலமாகும். சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
பழனியாண்டவர் பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி, ஜவஹர் ரோடு, ஈத்தாரி ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் காருக்கு ரூ.20, வேனுக்கு ரூ.25, லாரிக்கு ரூ.40, பஸ்ஸூக்கு ரூ.50 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது நகராட்சி விதி.
ஆனால் குத்தகைதாரர் சத்தியா அனைத்து வாகனதிற்கும் ரூ.60 வசூல் செய்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எலிப் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், பழனியில் பார்க்கிங் செய்யப்பட்டும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்தனர்.
மேலும், அந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், பழனி நகராட்சி ஆணையர், குத்தகைதாரர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications