தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்!
சென்னை: தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்து விட்டதால் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் காலையும், மாலையும் மின்சாரம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக மின்வெட்டை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்படி தொழிற்சாலைகளுக்கு ஷிப்ட் முறையில் வார விடுமுறை விடப்பட்டது. மேலும், நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரமும், நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரமும் மின்சாரத் தடை அமலானது.
பின்னர் மின் உற்பத்தி அதிகரித்ததால் இந்த மின்தடை அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின் தடை ஏற்பட்டு வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் தற்போது காலையிலும், மாலையிலும், சில நேரங்களில் இரவிலும் மின் தடை அமலாகிறது. காலையில் 3 மணி நேரம் வரையிலும், மாலையில் ஒரு மணி நேரம், இரவில் திடீர் திடீர்எனவும் மின்சாரம் தடைபடுகிறது.
இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்து அறிக்ைக வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசின் அறிவுரையின்படி மின்வாரியம், மின் விநியோகத்தை நிர்வகிக்க 21.7.08 முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தொழிற்சாலைகளுக்கு வாராந்திர விடுமுறையை சுழற்சி முறையில் மாற்றியமைத்தும், விவசாயிகளுக்கான மின்சாரத்ைத வாரத்திற்கு இருமுறை கட்டுப்படுத்தியும், மாநகர மற்றும் நகர மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கும் நேரத்தினை நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் குறைத்தும், மின் விநியோகத்தின் தேவையை முறைப்படுத்த முடிந்தது.
இக்கட்டுப்பாடுகளை அவ்வப்போது மின் நிலைமையை கருத்தில் கொண்டு ஆங்காங்கே தமிழ்நாடு மின்சார வாரியம் தளர்த்தி வந்தது.
ஆனால் கடந்த இரு தினங்களாக காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின் அளவு 1500 மெகாவாட்டிலிருந்து 450 மெகாவாட்டாக குறைந்ததாலும், மத்திய மின்தொகுப்பிலிருந்து பெறப்படுகின்ற மின் அளவு கணிசமாக குறைந்ததாலும், தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின் அளவு குறைந்ததாலும், மாலை 6 மணிக்கு மேலும் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே கணிக்க இயலாது.
தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. திடச்டமிட்டு பரமாரிப்புக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு மின் நிலைய அலகினைத் தவிர தமிழக மின் வாரியத்திலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்துமே முழுத்திறனுக்கு இயக்கப்படுகின்றன.
காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து தனியார் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறப்படும்போது மின் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மின் தடை திரும்பிவந்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications