போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் டிஸ்மிஸ்
செங்கோட்டை: போதையில் வகுப்புக்கு வந்த அரசு பள்ளி, பிளஸ் டூ மாணவர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களின் புத்தக பையில் இருந்தும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு தள்ளாடியபடியே வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவர்களை அழைத்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிளஸ் டூ விவசாய பிரிவு மாணவர்கள் ஸ்ரீபால், மதுகுமார் என்பது தெரிய வந்தது.
மேலும், இருவரும் மது அருந்திவிட்டு, போதையில் பள்ளிக்கு வந்ததும் தெரிய வந்தது. அவர்களின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். இதனால் பயந்துபோன மாணவர்கள் ஆசிரியர்களை தள்ளிவிட்டு ஓட முயன்றனர். அவர்களை ஆசிரியர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். ஆனால் மதுக்குமார் ஓடிவிட்டார். ஸ்ரீபாலின் புத்தக பையில் மது பாட்டில் இருப்பது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் காளியப்பனிடம் புகார் செய்தனர். இதையடுத்து மாணவர்கள் ஸ்ரீபால், மதுக்குமார் ஆகிய இருவரையும் பள்ளியை விட்டு நீக்கி தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த மாதம் மது அருந்தி பள்ளிக்கு வந்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications