இந்தியாவின் 7 அதிசயங்கள்-என்டிடிவி புதிய நிகழ்ச்சி!
டெல்லி: என்.டி.டி.வி செய்திச் சேனல், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து "இந்தியாவின் 7 அதிசயங்கள்" எவை என கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகச் சிறந்த சின்னங்கள் மற்றும் வரலாற்றுப் பொக்கிஷங்களை இன்றைய தலைமுறை வாயிலாக உலகுக்கு உணர்த்துவதற்காகவே இந்த திட்டம் என அறிவித்துள்ளது என்டிடிவி.
இந்தியாவின் இயற்கை மற்றும் செயற்கையான 7 அதிசயங்கள் எவை என்பதை வாசகர்களும் பார்வையாளர்களும் தார்மானித்து வரிசைப்படுத்தி அனுப்பி வைக்கலாம். பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்ற சின்னங்கள் இந்தியாவின் 7 அதிசயங்களாகப் பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்து என்.டி.டி.வி சேர்மன் ப்ரணாய் ராய் கூறுகையில், இத்திட்டத்தின் நோக்கமே உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நம் நாட்டின் விலை மதிப்பற்ற கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதுதான். அதே நேரம் இந்தியாவின் ஏழு அதிசயங்களை நாம் சொல்லித் தெரிந்து கொள்வதைவிட, அதை நாட்டு மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தீர்மானிப்பதுதான் சிறந்தது. அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வு முறை.
நாட்டின் மூலை முடுக்கில் உள்ள புதிய இடங்களைப் பற்றிய தகவல்களும் இதன மூலம் கண்டறியப்படும். நமது 5,000 ஆண்டு பழமையான கலாச்சாரத்தின் சின்னங்கள் எங்கிருந்தாலும் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம். உலகெங்கும் சென்று அடைய வகை செய்யலாம்..." என்றார் பிரணாய் ராய்.