வாந்தி-பேதி: 43 மாணவர்கள் 'அட்மிட்'
சென்னை: கல்வி சுற்றுலாவிற்காக சென்னை வந்த கேரள மாணவ, மாணவிகள் 43 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2 நாட்களாக தென் மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளின் கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்னை வந்தனர். நேற்றிரவோடு கல்வி கண்காட்சி முடிந்ததை அடுத்து ஆந்திரா மாணவ, மாணவிகள் கிளம்பிச் சென்றனர்.
கேரளாவைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் மட்டும் அப்பள்ளியில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிகாலை 2 மணி அளவில் 43 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஈயம் பூசாத பாத்திரத்தில் சமையல் செய்ததாலும், சுகாதாரமற்ற தின்பண்டங்களை சாப்பிட்டதாலும், வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications