சென்னையில் காதலர் கட்சி நடத்திய திருமணம்!
சென்னை: அகில இந்திய காதலர் கட்சி. நிஜமாகவே இப்படி ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் சென்னை கோடம்பாக்கம் பூபதி நகரை சேர்ந்தவர் குமார்ஸ்ரீஸ்ரீ. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அகில இந்திய காதலர் கட்சியை தொடங்கினார்.
காதல் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பை சமாளித்து பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் நடத்தி வைப்பதே இந்த காதலர் கட்சியின் கொள்கை(!!). இந்த காதலர் கட்சி நடத்தி வைத்த முதல் திருமணம் நேற்று வட பழனியில் நடந்தது.
சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் ஜார்ஜ் என்பவரின் மகன் சீனிவாசன் (22). தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். உடன் வேலை செய்யும் காமராஜ் காலனியை சேர்ந்த நாகமுத்துவின் மகள் லட்சுமியை (20) 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
காதலுக்கு சீனிவாசனின் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் பெற்றோர் லட்சுமி வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர்.
அதற்கு லட்சுமியின் தந்தை நாகமுத்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து அகில இந்திய காதலர் கட்சி தலைவர் குமார்ஸ்ரீஸ்ரீயின் உதவியை நாடினார். சீனிவாசனின் பெற்றோரும் குமார்ஸ்ரீஸ்ரீயை சந்தித்து பேசினர்.
இதையடுத்து குமார்ஸ்ரீஸ்ரீ, நாகமுத்துவிடம் பல நாட்கள் பேசி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். இதையடுத்து வட பழனி கோவில் குளம் அருகில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சீனிவாசன்-லட்சுமி திருமணம் நடந்தது.
குமார்ஸ்ரீஸ்ரீ, அவரது மனைவி மங்கா தேவி ஆகியோர் தாலியை எடுத்துத் தந்து மணமக்களை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications