டெல்லி-சென்னை எக்ஸ்பிரசுக்கு குண்டு மிரட்டல்
நாக்பூர்: டெல்லி - சென்னை இடையிலான கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனால் நாக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு நேற்று ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயரை மோகன்லால் என்று கூறிக் கொண்டார். பின்னர் திருப்பதிக்குச் செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து மேல் விவரங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று கூறி போனை வைத்து விட்டார்.
ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் அப்போது வந்து கொண்டிருந்தது. இது திருப்பதி வழியாக செல்லக் கூடியது. இதையடுத்து ஜிடி எக்ஸ்பிரஸை நிறுத்திய ரயில்வே போலீஸார் ரயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ஜிடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.
நாக்பூர் வழியாக தென் மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் ரயில்வே போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.