மதுரையில் கன மழை: வைகையில் வெள்ளம் - வீடுகள் மூழ்கின
மதுரை: மதுரையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.
மதுரையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த 2 மணி நேர மழையால் மதுரையில் பலத்த சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகள் நீரில் மிதந்தன. பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் நேற்றும் மழை கொட்டித் தீர்த்தது. மதுரை மற்றும் அருகில் உள்ள திருமங்கலம், அவனியாபுரம், நாகமலை புதுக்கோட்டை, ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், கருப்பாயூரணி, ஊமச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இந்த தொடர் கன மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றுக்கு அருகே வசிக்கும் 4000க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
தெற்குவாசல் பகுதியில் விளம்பர போர்டு விழுந்து பாபு ராவுத்தர் என்பவர் உயிரிழந்தார். விளாச்சேரியைச் சேர்ந்த கம்ரூல் ஜமால் என்ற சிறுவன் மின்னல்தாக்கி இறந்தான்.
மதுரை மட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்துள்ளது. இதில் சிவதாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கி நின்றதால் அவை தீவு போல காணப்பட்டன.
கரூரில் சுந்தரம்மாள் என்ற பெண் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். நெல்லையிலும் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது.
பாலாற்றிலும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஓகனேக்கல் பகுதியில் மழை பெய்துவருவதால் சின்னாறிலும் வெள்ளம் ஓடுகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.23 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 28 ஆயிரத்து 97 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.