பீகாரில் பரிதாபம்: மீட்பு படகு கவிழ்ந்து 20 பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு புறப்பட்ட மீட்பு படகு கவிழ்ந்ததில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நேபாளத்தில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து பீகார் மாநிலத்துக்கு வரும் கோசி ஆற்றில் கடந்த 2 வாரங்களாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோசி ஆற்றில் விநாடிக்கு 1.91 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடும் வெள்ளத்தால் ஆற்றின் வழக்கமான பாதை மாறிவிட்டது. மேலும் பல இடங்களில் உடைப்பும் ஏற்பட்டதால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதில் 55 பேர் பலியாயினர்.
இந்த நிலையில் மாதேபுரா மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மீர்கஞ்ச் என்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று மாலை அதிவேகமாக நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட 60 பேரை மீட்புக்குழுவினர் படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். கோசி ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அந்த படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த மீட்பு குழுவினர் உள்பட அனைவரும் ஆற்றில் விழுந்தனர். தகவலறிந்த ராணுவ மீட்புக்குழுவினரும், தேசிய பேரழிவு மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்கும் பணியில் வேகமாக ஈடுபட்டனர். எனினும் இதில் 20 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததாலும், இருட்டி விட்டதாலும் மீட்பு பணிகள பாதிக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் ஒருவர் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications