துரோகம் செய்தவர் கருணாநிதிதான்-நெடுமாறன்
சென்னை: காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.
அதற்கு நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.
அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.
பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.
1969ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.
அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.
அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.
1996ம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.
1983ம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.
பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.