சங் பரிவார் அட்டூழியம்: ஒரிஸ்ஸா அரசை கலைக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிருஸ்தவர்களை சங் பரிவார் தீவிரவாதிகள் தாக்கி வருவதை தடுக்காத அந்த மாநில அரசு உடனே கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிருஸ்தவர்களையும், அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களையும், தேவாலயங்களையும் சங் பரிவார் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மதசார்பற்ற இந்தியாவில் எந்த அளவுக்கு மதவெறி தலைதூக்கி விரித்தாடுகிறது என்பதற்கும், குறுகிய மதவெறி உணர்வுகள் தடுக்கப்படாவிட்டால், நிலைமை எந்த அளவுக்கு கட்டுக்கு அடங்காமல் போகும் என்பதற்கும் ஒரிஸ்ஸாவில் நடந்துள்ள வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் மிக மோசமான எடுத்துக் காட்டாகும்.
ஒரு அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அந்த அமைப்பினர் ஆத்திரம் அடைவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் படுகொலைக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சிறுபான்மை மக்களை பழிவாங்கும் நோக்கில் வன்முறையில் ஈடுபடுவதை நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
பலநாட்களாக நடந்து வரும் வன்முறையை ஒடுக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பாஜக பங்கேற்றுள்ள ஒரிஸ்ஸா மாநில அரசு தவறி விட்டது. மக்களை காக்க தவறிய ஒரு மாநில அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு எந்தவகையிலும் நியாயம் இல்லை.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி அந்த அரசைக் கலைப்பதற்கு தகுந்த அடிப்படை உள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
வகுப்பு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரிஸ்ஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் குறுகிய மத உணர்வுகளையும் அதன் விளைவாக தலைதூக்கும் வன்முறை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்திட மத்திய அரசும், எல்லா மாநில அரசுகளும், காவல்துறையும், சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பவர்களும் முன்வர வேண்டும். இதன் மூலம் மதசார்பற்ற இந்தியாவை கட்டிக்காக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications