ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது
திருத்தணி:சிறை பிடிக்கப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் திருநாவுக்கரசு. கடந்த 14ம் தேதி ராமாபுரம் அருகே குசஸ்தலை ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியதாக அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை எஸ்ஐ திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த டிராக்டரை திருப்பித் தரும்படி திருநாவுக்கரசிடம் பாபு கேட்டார். அதற்கு ரூ.6,000 லஞ்சம் கொடுத்தால், டிராக்டரை தருவதாக திருநாவுக்கரசு கூறியதாக தெரிகிறது.
இதற்கு ஒப்புக்கொண்ட பாபு முதல் கட்டமாக ரூ.1,300 கொடுத்துள்ளார். இதன் பின்னர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பாபு இதுகுறித்து புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பாபுவுடன் கனகம்மா சத்திரத்துக்கு விரைந்தனர். அங்கு தனியார் ஹோட்டலில் எஸ்ஐ திருநாவுக்கரசரிடம் கொடுக்கும்படி ரூ.5,000த்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாபுவிடம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, திருநாவுக்கரசை சந்தித்த பாபு அந்த பணத்தை அவரிடம் கொடுத்தார். பணத்தை திருநாவுக்கரசு வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தனர். கணக்கில் வராத ரூ.15,000 பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.