தமிழ்நாடு 'லிஸ்டிலேயே' இல்லையே-ராமதாஸ்
சென்னை: ரூ.1க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் மக்களின் வறுமையை போக்கிவிடாது. எனவே அரிசி விலையைக் குறைப்பதை விட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்:
தொழில் முதலீட்டைப் பெற்றதிலும், அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கியதிலும், தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், எத்தனை ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலை கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை கேள்வி எழுப்பியும். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொழில் முதலீட்டைப் பெற்றதில் 10 முன்னணி மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 10 முன்னணி மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இடம் பெறவில்லை.
புதிதாக உருவான சட்டீஸ்கர் மற்றும் பின் தங்கிய மாநிலங்கள் என்று கருதப்பட்ட ராஜஸ்தான், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்கள் கூட இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளன. தமிழகம் 10வது இடத்திற்கும் கீழே தள்ளப்பட்டு நிற்கிறது.
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இந்த தகவல், என்னுடைய சந்தேகத்தையும், என்னுடைய குற்றச்சாட்டையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டத்தினால், ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவர் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.
இவர்களுடைய இத்தனை ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும், தமிழகத்தில் இன்னமும் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் இரண்டு ரூபாய்க்கு கூட ஒரு கிலோ அரிசி வாங்கி வாழ முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று அறியும்போது, இந்த அறிவிப்பால் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்?.
அரிசி விலையைக் குறைப்பதை விட, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கு எல்லாருக்கும் வேலை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கே செலவழிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.
அண்ணாவின் இந்த கனவை நிறைவேற்ற முன்வராமல் ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications