ஓகனேக்கலில் வெள்ளம்-மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஓகனேக்கல்: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓகனேக்கலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அபரிமிதமாக வரும் தண்ணீர் காரணமாக ஓகனேக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக ஓகனேக்கல், ஒட்டமலை, பில்லிகுண்டு ஆகிய பகுதிகளில் மீன் பிடி நிறுத்தப்பட்டு விட்டது. ஓகனேக்கல் அருவிப் பகுதிகளில் பரிசல் சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையில் 88.980 அடி தண்ணீர் இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 46 ஆயிரத்து 348 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 4 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications