சன் டிவி வழக்கு-ஆர்.சி.விக்கு நோட்டீஸ்!
சென்னை: சன் டிவி தொடர்ந்துள்ள வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் டிவி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சன் டிவி நிறுவன சானல்களின் சிக்னல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்து, அவற்றை தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆர்.சி.வி. வழங்கி வருகிறது.
இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஆர்.சி.வி. நிறுவனம் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களுடன்ஆர்.சிவி நிறுவனம் எந்தவித சப்ஸ்கிரிப்ஷன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனவே எங்களது சிக்னல்களை அவர்கள் பயன்படுத்த முடியாத. ஆனால் இதை மீறி எங்களது நிறுவன சானல்களின் சிக்னல்களை திருட்டுத்தனமாக டேப் செய்து, விநியோகித்து வருகிறது ஆர்.சி.வி.
இதன் மூலம் சன் டிவி நிறுவன சானல்களின் காப்பிரைட் மற்றும் ஒளிபரப்பு உரிமைகளையும் மீது மீறியுள்ளது. எங்களது சானல்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் அவர்கள் திருட்டுத்தனமாக விநியோகித்து வருகிறார்கள்.
எங்களது அனுமதியின்றி சன் டிவி, கேடிவி, சன் மியூசிக், சன் நியூஸ் உள்ளிட்ட சானல்களின் சிக்னல்களைப் பெறும் கேபிள் ஆபரேட்டர்கள் யார் என்பதை கண்டறிய அட்வகேட்- கமிஷனர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செப்டம்பர் 8ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி அன்றைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆர்.சி.விக்கு உத்தரவிட்டார்.
யாரையும் மிரட்டவில்லை-ஆர்சிவி:
இதற்கிடையே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் யாரையும் மிரட்டவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனுக்கு, ராயல் கேபிள் விஷன் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
அதன் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் உள்ள கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மீது பொய் வழக்கு தொடுப்பதாகவும், மிரட்டப்படுவதாகவும், ராயல் கேபிள் விஷன் இணைப்பை மட்டுமே பெற்று விநியோகிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வந்துள்ளது.
வரதராஜன் ஒரு தரப்பு செய்தியை மட்டும் கேட்டுக்கொண்டு அதில் உண்மை இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளாமல் எங்கள் நிறுவனத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி தந்ததற்காக வருந்துகிறோம்.
அவரை சந்தித்து மனு கொடுத்தவர்கள் சன்' தொலைக்காட்சியினரின் தூண்டுதலில் பேரில் அவரை சந்தித்து இருக்கிறார்களே தவிர வேறல்ல.
இந்த தொழிலில் ஏகபோக உரிமையை தடுக்கும் வகையில் தமிழக அரசே அனைவருக்கும் பொதுவாக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியபோது, மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழக அரசின் டி.வி.க்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் நிறுவன சேனல்களை அரசு கேபிள் மூலம் ஒளிபரப்புவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒரு டி.வி. நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாக, அரசுக்கே இன்று வரை அந்த உரிமையை தர மறுத்து வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற உண்மையைக் கூட, என்.வரதராஜன் போன்றவர்கள் புரிந்து கொள்ளாமல், அந்த டி.வி. நிறுவனம் தூண்டிவிட்டு அனுப்புகிற ஒரு சிலரின் மனுவை உண்மையாக கருதி முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்காக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் சொல்லி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மக்கள் விரும்பும் பிரபல சானல்கள் ஒளிபரப்பை ராயல் கேபிள் நிறுவனம் வழங்கவில்லை என்றும், ஏதோ நாங்கள் தான் அந்த சேனல்களின் ஒளிபரப்பை காட்ட மறுப்பது போலவும் வரதராஜன் சொல்லியிருக்கிறார்.
எங்களை பொறுத்தவரை நாங்கள் யாரையும் மிரட்டவும் இல்லை, மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தோழர் வரதராஜன் தெரிவித்துள்ள கருத்துகளில், எங்களுடைய நிறுவனம் எங்கள் நிறுவனத்தின் சேனல்களை தான் மதுரையில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறியிருப்பதும் உண்மையல்ல.
இந்த விவரங்களை மதுரை வாழ் மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications