மூடப்பட்ட அமெரிக்கன் கல்லூரி திறப்பு-மரத்தடியில் வகுப்புகள்
மதுரை: கல்லூரி முதல்வர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து மூடப்பட்ட மதுரை அமெரிக்கன் கல்லூரி இன்று திறக்கப்பட்டது. ஆனால் வகுப்பறைகள் மூடப்பட்டிருந்ததால் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்து வந்த ஜோசப் சின்னராஜ் சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில், பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், ஜார்ஜ் செல்வக்குமாரை புதிய முதல்வராக அறிவித்தார்.
இதற்கு ஆசிரியர்களில் ஒருதரப்பினரும், மாணவ, மாணவியரும் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியேற்க ஜார்ஜ் செல்வக்குமார் வந்தபோது பெரும் மோதல் வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தி மாணவ, மாணவியரைக் கலைத்தனர்.
இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜார்ஜ் செல்வக்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பறை எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் ஆசிரியர்கள் அவர்களை மரத்தடிகளில் அமர வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தனர்.
முதல்வர் விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் கவலைப்படாமல், பாடங்களில் கவனம் செலுத்தி தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications