அரசு கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருமாறு தமிழர்களுக்கு ராஜபக்சே அட்வைஸ்
கொழும்பு: விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு வசிதக்கும் தமிழர்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்து விட வேண்டும் என அதிபர் ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே கடும் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தப் பகுதிகளில் இதுவரை ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய விடுதலைப் புலிகள் தற்போது எதிர் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.சமீபத்தில் 70க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில், அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி ராணுவத்தினருக்கு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறும்படியும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு குடிபெயர்ந்து பாதுகாப்பாக வாழும்படியும் தமிழர்களுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை இலங்கை செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனுரா ப்ரியதர்ஷனா யபா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களை பாதுகாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும அரசு செயல்படுத்தி வருகிறது. புலிகள் ஒழிக்கும் இந்த சவாலை அடைய நீண்ட தூரம் இல்லை. புலிகளின் பகுதிகளுக்குள் ராணுவம் முழு வேகத்தில் நுழைந்து வருகிறது.
தீவிரவாதம் இல்லாத, எல்லா மக்களும் நல்லிணக்கத்தோடு பயமின்றி வாழும் நாடாக இலங்கை வெகு விரைவில் உருவாகும் என்றார்.
தமிழர்கள் இடம் பெயர வேண்டும் என ராஜபக்சே கூறியுள்ளது, மிகப் பெரிய தாக்குதல் நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை என்று கருதப்படுவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில் ஈழத் தமிழர்கள் உள்ளனர்.