மதுரை: சிபிஎம் கொடி கிழிப்பு-எம்பி மறியல், தடியடி
மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியை கிழித்தவர்களை கைது செய்ய கோரி எம்பி மோகன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது எதிர்தரப்பினருக்கும் சிபிஎம் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
தென்மாவட்ட வ.உ.சி. இளைஞர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.கணேசன் தலைமையில் ஏராளமானோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது சிலைக்கு முன்பு கட்டப்பட்டு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகளை சிலர் கிழித்து எறிந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை சிபிஎம் எம்.பி. மோகன், எம்எல்ஏ நன்மாறன் மற்றும்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கட்சி கொடியை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று எம்பி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே கணேசனும் அவரது ஆதரவாளர்களும் ஒரு ஆட்டோவில் திரண்டு வந்து எதிர்கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. திடீரென்று ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கொடிக் கம்பங்களை உருவி அடித்தனர்.
நிலைமையை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி, மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். சிபிஎம் கட்சி கொடியை சேதப்படுத்தியதாக கணேசனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications