மதுவிலக்கு: ஜனவரியில் போராட்டம்-ராமதாஸ்
திருப்பத்தூர்: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவில்லை என்றால் வரும் ஜனவரி மாதம் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையத்தில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராமதாஸ் பேசுகையில்,
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று அரசு விளக்கம் கொடுக்கிறது. மாற்று மது ஒழிப்பு கொள்கை என்ற திட்டத்தை அரசிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.
34 ஆண்டுகளாக கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு இலவசமாக எதுவும் வேண்டாம். மதுவால் எனது கணவர், மகனின் உயிரை பறிக்காதீர்கள் என்று பெண்கள் கூறுகின்றனர். பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், மதுவை ஒழிக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?
நாங்கள் ஒரேடியாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. 8,000 மதுக்கடைகள் என்பதை 4,000மாக மாற்றுங்கள். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரையிலோ அல்லது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலோ மதுக்கடைகளை திறந்து கொள்ளுங்கள், சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடுங்கள் என்றுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதற்கு கண்டிப்பாக விடிவு காலம் கிடைக்கும். அப்படி எங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வருகிற ஜனவரி மாதம் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications