பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஜர்தாரி வெற்றி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபராக பாகிஸ்தான் மக்கள் கட்சி துணை தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகியதைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜர்தாரி அறிவித்ததால் ஆளும் கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றார் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப்.
ஜர்தாரி தவிர, நவாஸ் ஷெரீப் கட்சி சார்பில் முன்னாள் தலைமை நீதிபதியான சையீத் உஸ்மான் சித்திக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் சார்பில் முஷாகித் உசேன் சையீத் ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்கள் என மொத்தம் 700 பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 436 ஓட்டுகளில் 426 வாக்குகள் பதிவாகின. இதில் 281 வாக்குகள் பெற்று ஜர்தாரி வெற்றி பெற்றார்.
மாகாணங்களில் பதிவான வாக்குகளில் ஜர்தாரிக்கே அதிக வாக்குகள் கிடைத்தது. குறிப்பாக பலுஜிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் அதிகப்படியான வாக்குகளை ஜர்தாரி பெற்றார்.
அதிபராக தேர்வு செய்யப்பட்டால் பணவீக்கம், விலைவாசி உயர்வு, தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவேன். அரசை டிஸ்மிஸ் செய்யும் அதிபரின் அதிகாரத்தையும் குறைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜர்தாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெஷாவரில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி:
இதற்கிடையே, வட மேற்கு நகரமான பெஷாவரில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
போலீஸ் செக் போஸ்ட்டில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. பாதாபெர் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் போலீஸ் செக் போஸ்ட், அருகில் இருந்த இரு மார்க்கெட், 15 வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.