இயற்கை பேரிடரை கண்டறிவிக்கும் செயற்கைகோள்களை ஏவிய சீனா
பெய்ஜிங்: இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கும் இரண்டு செயற்கைகோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
சீனாவில் ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள தையூவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து 2 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
இந்த செயற்கைகோள்கள், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், பயிற்களை தாக்கும் தொற்று நோய் உள்பட இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கும். இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும், சேதங்களை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த செயற்கைகோள்கள் சுற்றுசூழல் குறித்து கண்காணிக்கும் நமது ஆற்றலை அதிகரிக்கும் என்று சுற்றுசூழல் பாதுகாப்பு இணை அமைச்சர் வூ ஸியோகிங் கூறியுள்ளார்.
சீனாவில் ஆண்டுதோறும் ஏற்படும் சூறாவளி, புயல், வெள்ளம், வறட்சியால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் இயற்கை பேரிடர்களால் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் சீனாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்மேற்கு சீனாவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.
எனவே இந்த இரண்டு செயற்கைகோள்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 43 செயற்கைகோள்களை சீனா செலுத்தியது என்பது நினைவிருக்கலாம்.