சொந்த உபயோகத்திற்காக விமானம் வாங்கும் ஜெ.?
சென்னை: சொந்த உபயோகத்திற்காக தனி விமானம் ஒன்றை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு பயணமானார். அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சசிகலா நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், உடனடியாக மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்திலிருந்த மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் சசிகலா மீண்டும் திரும்பி விமான நிலையத்திற்குள் சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பினர்.
உள்ளே சென்ற சசிகலா, பழைய விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றில் ஏறியதாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை அவர் அந்த விமானத்தில் பறந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த விமானத்தை ஜெயலலிதா வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்காக இந்த விமானத்தை ஜெயலலிதா வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இதை அதிமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications