நாடாளுமன்ற கூட்டம்-ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள்
டெல்லி: நாடாளுமன்றத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரி இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் போன்ற மூன்றாவது அணி கட்சிகளும் ஜனாதிபதியை இன்று சந்தித்தன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரும், குளிர்காலக் கூட்டத் தொடரும் சேர்த்து ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மழைக்கால கூட்டத் தொடரை உடனே கூட்ட வலியுறுத்தி இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், பார்வர்ட் பிளாக், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை இன்று பிற்பகல் சந்தித்தனர்.
நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே கூட்டத் தொடரை கூட்ட வழிகாண வேண்டும் என்று ஜனாதிபதியிடம் இந்த குழு முறையிட்டது. அப்போது ஜனாதிபதியிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
மழைக்காலகூட்டத் தொடரை உடனே கூட்ட வேண்டும், அணுசக்தி ஒப்பந்தம், உயர்ந்து கொண்டே செல்லும் பணவீக்கம், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், ஜம்மு, காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவங்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் உள்ளன. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு கூட்டத் தொடரை இந்த அரசு ரத்து செய்துள்ளது.
இந்த பிரச்சனை மிகவும் சீரியஸானது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை தொடர்புடையது. இது தொடர்பாக பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி தலைவர்கள் கூறுகையில், சுதந்திரம் கிடைத்ததில் இருந்து ஒரு கூட்டத் தொடர் ரத்து செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். அணு ஒப்பந்தம் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை இந்த அரசு மூடி மறைக்கிறது. அணு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டார். எங்கள் கேள்விகளுக்கு இந்த அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஐக்கிய முற்போக்கு அரசு கூட்டத் தொடரை கூட்ட மறுப்பது, அரசியல் சட்ட பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மைனாரிட்டி அரசு மெஜாராட்டியை நசுக்குகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஷ்ரா கூறினார்.