பாஜகவுக்கு வெற்றியை தரும் காங்.: நல்லக்கண்ணு
சிவகாசி: வரும் தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பை, காங்கிரஸ் கட்சியே உருவாக்கி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சிவகாசியில் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூலிப்பதற்காக வந்த நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் மின் வெட்டால் ஜவுளி, விவசாயம், பட்டாசு தொழில் மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். மின் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமலே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி என்ன பயன்?. மளிகை பொருட்களின் விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இரண்டு மாதத்திற்கு முன் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 142 டாலராக இருந்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டது. இப்போது 116 டாலராக விலை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை?.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி இல்லை. இந்த இரு கட்சிகளையும் எதிர்க்க கூடிய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
வரும் தேர்தலில் பாஜக, வெற்றி பெறும் வாய்ப்பை, காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications