ராடார் தளம் அழிப்பு: விமானங்கள் பத்திரமாக திரும்பின-புலிகள்

இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது இலங்கை ராணுவத்தின் வன்னித் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப் படையினரின் ராடார் நிலையத்தை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ராடார் நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
வான் புலிகளுக்கு உதவியாக ராணுவ தலைமையகம் மீது கர்னல் கிட்டு தலைமையிலான படை பீரங்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
வெடிபொருள் இருப்பு வைக்கும் நிலையமும், தொலைத் தொடர்பு கோபுரமும் முற்றிலும் அழிந்து விட்டன. விமான எதிர்ப்பு கருவிகளும் அழிக்கப்பட்டன.
தாக்குதல் நடத்திய வான்புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாக தளம் திரும்பின.
தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் படையைச் சேர்ந்த மதியழகி, ஆனந்தி கனிமதி, முத்துநகை, அறிவுத்தமிழ், வினோதன், நிலாகரன், எழிலகன், அகிலன், நிமலன் ஆகியோர் மரணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புலிகளின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இலங்கை விமானப் படை கூறியது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் விமான தாக்குதலில் இந்தியா வழங்கிய ரேடார்கள் சேதமடைந்ததோடு, அதை இயக்கிய 2 இந்தியர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு கனத்த அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications