சுடுகாட்டு கூரை வழக்கு: ஆஜராக செல்வகணபதிக்கு உத்தரவு
மதுரை: அதிமுக ஆட்சியில் நடந்த சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை வரும் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் விளாச்சேரி, உத்தங்குடி உள்பட பல இடங்களில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ரூ.22 லட்சம் வரை ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போது மதுரை மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் சிபிஐயிடம் புகார் செய்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி சிபிஐ விசாரணை நடத்தியது.
விசாரணை முடிவில் முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, காதித் துறை முன்னாள் அதிகாரி ராஜகோபாலன், ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குனர் சத்தியமூர்த்தி, முன்னாள் செயலாளர் ஆச்சார்யலு, துறை அதிகாரிகள் அசோக், மோகன் உள்பட உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் திட்ட இயக்குனர் உமாசங்கர் மற்றும் துறை அதிகாரிகள், காண்டிராக்டர்கள், வருவாய் அதிகாரிகள், விஏஒக்கள் உள்பட 177 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதில் உமாசங்கர் உள்பட 138 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அப்போது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர் ராஜாமணி, முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து சாட்சி விசாரணைகள் தேவை இல்லை என்பாதல் சாட்சி விசாரணையை முடித்து கொள்கிறேன். வழக்குத் தொடர்பாக மேலும் 197 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், அடுத்தக்கட்டமாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும். வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.
அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications